கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை
கண்டங்கத்திரியை நன்கு காய வைத்து அதை சமையலில் பயன்படுத்தி வர நெஞ்சில் கட்டி உள்ள சளி வெளியேறும். மேலும் பசியின்மையை போக்கி பசியை தூண்டும்.குழந்தைகளுக்கு ஏற்பட்ட நாட்பட்ட இருமலுக்கு,கண்டங்கத்திரி பழத்தை நன்கு உலர்த்தி அதை பொடியாக்கி, அதில் சிறிதளவு எடுத்து தேனுடன் கலந்து இரன்டு வேளை கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.கண்டங்கத்திரி பழத்தை நெருப்பில் போட்டு அதில் இருந்து வெளியேறும் புகையை வாயில் சுவாசித்து வர பல்வலி சரியாகும். அதே போல் வாய் மற்றும் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கும்.
கண்டகத்தரியின் முழு சமூலம் 1 கைபிடி, ஆடாதொடை இலை 1 கைபிடி, விஷ்ணுகரந்தை சமூலம் 1 கைபிடி, சீரகம் 10 கிராம், சுக்கு 10 கிராம் ஆகிய அனைத்தையும் எடுத்து லேசாக தட்டி அதை இரண்டு லிட்டர் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அரை லிட்டர் ஆக காய்ச்ச வேண்டும். பின்பு அதில் இருந்து 100 மில்லி அளவு தண்ணீர் எடுத்து ஐந்து வேளை குடித்து வந்தால் புளுசுரம், காய்ச்சல் குணமாகும்.
40 கிராம் அளவிற்கு கண்டங்கத்தரி வேர், ஆடாதொடை வேர் ஆகிய இரண்டையும் எடுத்து அதனுடன் அரிசி திப்பிலி 5 கிராம் சேர்த்து தட்டி இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீர் அரை லிட்டராக குறைந்தவுடன் இறக்கி அதில் இருந்து 100 மில்லி தண்ணீர் எடுத்து தொடர்ந்து ஐந்து வேளை குடித்து வர ஆஸ்துமா, இரைப்பிருமல், கபநோய், பீனிசம் குணமாகும்.